மதவாத இயக்கம் சதி? கோவை, திருப்பூரில் போலீஸ் 'அலர்ட்'

கோவை: கோவை, திருப்பூரிலுள்ள முக்கிய வழிபாட்டு தலங்களை தாக்க, அல்லது குறிப்பிட்ட மத இயக்க தலைவர்களை கொல்ல, மதவாத இயக்கம் ஒன்றின் ஆயுதப் பயிற்சி பெற்ற நபர்கள் சதி செய்துள்ளதாக, டி.ஜி.பி., அலுவலகம், இருமாவட்ட போலீஸ் உயரதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.



கோவை, திருப்பூர் போலீஸ் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி., அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள அறிவுறுத்தல்: தேசிய அளவில் செயல்படும், மதவாத இயக்கம் ஒன்றின் ஆயுதப் பயிற்சி பெற்ற நபர்கள் கோவை மற்றும் திருப்பூரில் ஊடுருவி முக்கிய வழிபாட்டு தலங்களை தாக்கவோ அல்லது குறிப்பிட்ட மத இயக்க தலைவர்களை கொல்லவோ, திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்விரு மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் உயரதிகாரிகள் உஷாராக இருந்து, சரியான பாதுகாப்பு திட்டங்களை உடனடியாக வகுக்க வேண்டும். சோதனைச் சாவடிகளை உஷார் படுத்துங்கள். ரயில்வே ஸ்டேஷன்களில் கண்காணிப்பை பலப்படுத்துங்கள். பொது இடங்களிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருந்து கண்காணியுங்கள்.